Kahlil Gibran kavithai inbam

My Tamil translations of Kahlil Gibran's poems

Name:
Location: Chennai, TamilNadu, India

Tuesday, June 29, 2004

17. வருந்தும் பாவிகள்


நிலவற்ற
அமாவாசை இரவொன்றில்
பக்கத்து வீட்டுத் தொட்டத்தில்
புகுந்து
இருப்பதிலேயே
பெரிய பூசணியொன்றைத்
திருடினான் ஒருவன்.

திருட்டுப் பூசணியுடன்
வீடு வந்து சேர்ந்து
அறுத்துப் பார்த்தபோது
அதிர்ந்தான்.

இன்னும் பழுக்காத காய்!!

அப்போது தான்
அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அவன் மனசாட்சி
விழித்துக் கொண்டது.
அவனைக் கண்டித்தது.
செய்த பாவத்துக்கு
வருந்தினான் அவன்.

Friday, June 18, 2004

16. இலையிடம் புல் சொன்னது


இலையுதிர் காலத்து
இலை ஒன்றிடம்
புல் சொன்னது:
"நீ நிலம் நோக்கி
விழும் போது
எத்தனை ஓசை செய்கிறாய்.
நாராசம்!
என் குளிர் காலக் கனவுகள்
அனைத்தையும்
கலைத்து விடுகிறாய்.
ஒழிந்து போ எங்காவது.!!"

இலை
எரிச்சலுடன்
மறுமொழி இறுத்தது:
"சீச்சீ! அற்பப் பிறவியே!
கீழே பிறந்து கீழே வாழ்ந்து
கீழே மடியும் கீழான பிறவியே!
மேலே இருக்கும் காற்றின்
இசை, இன்பம், இனிமை
இது குறித்தெல்லாம்
ஏதும் அறிவாயா நீ?
எனது இசையைப் பற்றி
ஏதும் பேசாதே!!
வாயை மூடு..!!"

இலையுதிர் காலத்தின்
இயல்புக்கேற்ப
இலை கீழே விழுந்தது.
மண்மீதில் உறங்கியது.

வசந்தத்தின் வருகையால்
அதுவும் ஒரு புல்லாய்
மறுபடி முளைத்தது.

இலையுதிர்காலம் மீண்ட போது
குளிர்கால உறக்கத்தின்
பிடிக்குள்ளிருந்த படி
அது தனக்குள் முனகியது:
"சீ! இந்த இலையுதிர்காலத்து இலைகள்.!
எத்தனை ஓசை! எத்தனை கூச்சல்!
என் குளிர்காலக் கனவுகளை
துரத்திவிடுகின்றன.!!"